நல்லவர் உள்ளம் தீமை செய்யாது

நல்லவர் உள்ளம் தீமை செய்யாது

குருஷேத்திரப் போர் முடிந்தது. பீமனின் கதையால் தாக்கப்பட்ட துரியோதனன் சாகும் நி லையில் இருந்தான். அங்கு வந்த அஸ்வத்தாமன் துரியோதனனுக்கு மகிழ்ச்சி அளிக்க விரும்பினான்.
பாண்டவர்களின் பாசறைக்குள் நள்ளிரவில் நுழைந்து உப பாண்டவர்கள் ஐவரையும் கொன்றான். அவர்களின் தலையை எடுத்துவந்து துரியோதனனிடம் காட்டினான்.
ஆனால் துரியோதனனோ, மகிழ்ச்சி அடைவதற்கு பதில், " என் எதிரிகள் பாண்டவர்களே ! அவர்கள் மக்களாகிய உப பாண்டவர்கள் அல்ல. எதற்காக இந்தக் குழந்தைகளைக் கொன்றாய் ? " என்று வருத்தத்துடன் கேட்டு உயிரை விட்டான்.
தனது குழந்தைகள் ஐவரும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பாஞ்சாலி அழுது புலம்பித் துடித்தாள்.
பாஞ்சாலியைப் பார்த்து அர்ச்சுனன் " அன்பே ! நம் குழந்தைகளைக் கொன்ற அந்த அஸ்வத்தாமனின் தலையைக் கொண்டு வருகிறேன். இது என் காண்டீபத்தின் மீது ஆணை. அவன் தலையையே பாத்திரமாக வைத்து நம் குழந்தைகளை நீராட்டு " என்று வெஞ்சினம் கூறிப் புறப்பட்டான்.
அஞ்சி ஓடும் அஸ்வத்தாமனை அர்ஜுனன் துரத்திச் சென்று போரிட்டான் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. அஸ்வத்தாமன் எய்த அம்புகள் அனைத்தும் பயனற்றுப் போயின. தோற்ற அஸ்வத்தாமனை அர்ஜுனன் கொல்லவில்லை . கைற்றால் பிணைத்து தன் பாசறை நோக்கி
இழுத்து வந்தான்.
இதைப் பார்த்த கண்ணன் , " அர்ஜுனா ? இந்தக் கொடியவனை எங்கே இழுத்துச் செல்கிறாய் ? காண்டீபத்தின் மீது ஆணையிட்டு இவனைக் கொல்வதாகச் சபதம் செய்தாயே , என்ன ஆயிற்று ? தூங்கிக்கொண்டிருந்த சிறுவர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்றானே , இவனை இப்போதே கொல்வதே நீ இங்கு செய்ய வேண்டியது " என்றார்.
" கண்ணா ! நான் என்ன செய்வேன் ? என் மக்களைக் கொன்ற இவன் என் ஆசிரியரின் மகனாக அல்லவா இருக்கிறான் ? இவனைக் கொன்று என் ஆசிரியரின் குடும்பத்திற்கு எப்படித் துன்பத்தை ஏற்படுத்துவேன். அவரும் என்னைபோல மகனை இழந்த துன்பத்தில் துடிப்பாரே " என்றான் அர்ஜுனன் .
அஸ்வத்தாமனை இழுத்து வந்து பாஞ்சாலி முன் நிறுத்தினான் அர்ஜுனன்.
தலை கவிழ்ந்தபடி நின்ற அஸ்வத்தாமனின் நிலையைக் கண்டு பாஞ்சாலி உள்ளம் இளகியது.
" என் குழந்தைகளைக் கொன்ற பெரும்பாவி இவன். ஆனால் இவனைக் கொன்று நாம் குருத் துரோகத்திற்கு ஆளாக வேண்டாம். நான் குழந்தைகளை இழந்து தவிப்பதைப் போல , நம் குருவின் மனைவியும் தவிக்க வேண்டாம். இவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடுங்கள் " என்றாள் பாஞ்சாலி.
விடுதலைப் பெற்ற அஸ்வத்தாமன் தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்றான்.