கருவுற்ற தாய்மார்களுக்கான பதிவு இது பாரம்பரிய முறை

கருவுற்ற தாய்மார்களுக்கான பதிவு இது பாரம்பரிய முறை

கர்பத்தில் சிசு வளரும் போதே, சிசுவின் பராமரிப்புக்காக ஜோதிட ரீதியாக தாய் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், மற்றும் தெய்வ வழிபாடுகள் பற்றி விளக்கிச் சொல்லும் கட்டுரை இது..
தற்காலத்தில் அறிவியல் ரீதியாக கர்பத்தில் சிசுவின் வளர்ச்சியை கண்டறிந்து, அதற்குத் தகுந்தாற் போல், மருத்துவ முறைகளை மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள். அது சிசு நல்ல முறையில் வளர்ச்சியடைய உதவுகிறது. பழங்காலத்தில், மக்கள், கருவுற்ற தாய்மார்களின் நலனுக்காக, சித்த மருத்துவர்களையும், ஜோதிடர்களையும் அணுகி, அதற்கு தீர்வு கண்டிருக்கிறனர். அக்காலத்தில் சுகப்பிரசவம் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்து வந்தது.
நமது மெய்ஞானிகள் ஜோதிடரீதியாக இதை அணுகி, சிசுவின் வளர்ச்சிப் பராமரிப்புக்காக ஜோதிட ஸ்லோகங்களை எழுதி வைத்துள்ளனர். மருத்துவத்தோடு ஒரு படி மேலே போய் அந்த நேரத்தில் வணங்கவேண்டிய தெய்வங்களை அறிந்துகொள்ளும் வழிமுறை களையும் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகளை பற்றியும் வழிகாட்டியிருக்கிறார்கள். இதனால் தாயும் சேயும் நலமாக இருந்ததோடு, ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு ஸ்லோகத்தின் பொருளை இப்போது பார்க்கலாம்.
ஸ்ரீ வராகிமிகிரர், தனது பிருகத் ஜாதகத்தில், 4 வது அத்தியாயத்தில் 16 வது ..
" கெற்பந்தரிக்கும் முதலாவது மாதத்தில் சுக்கிலம் சுக்கிலமாகவே கருப்பையில் தங்கியிருக்கும். அதன் அதிபதி சுக்கிரன்.
இரண்டாவது மாதத்தில் சுக்கிலம் வளர்ந்து மாமிசமாகும். இதன் அதிபதி செவ்வாய்.
மூன்றாவது மாதத்தில் மாமிசம் வளர்ந்து அவயங்களாகும். இதன் அதிபதி குரு.
நாலாவது மாதத்தில் எலும்புகள் உண்டாகும். இதன் அதிபதி சூரியன்.
ஐந்தாவது மாதத்தில் தோல் உருவாகும். இதன் அதிபதி சந்திரன்.
ஆறாவது மாதத்தில் உரோமம் வளரும். இதன் அதிபதி சனி.
ஏழாவது மாதத்தில் ஞானேந்திரியம் என்று சொல்லப்படும் பஞ்சேந்திரியங்கள் உண்டாகின்றன. இதன் அதிபதி. புதன்.
எட்டாவது மாதத்தில் உந்திக் கொடியின் வழியாக, தாய் உண்ணும் உணவின் சத்தை சிசு உண்ண ஆரம்பிக்கிறது. இதன் அதிபதி. நிஷேக லக்னாதிபதி.
ஒன்பதாவது மாதத்தில் சிசுவிற்கு மானிட ஜென்மத்தின் கவலைகள் உண்டாகின்றன. இதன் அதிபதி சந்திரன்.
பத்தாவது மாதத்தில் சிசு பூமியில் வந்து பிறக்கின்றது.
இதன் அதிபதி சூரியன் என்பதாம்.
இதில் நிஷேக லக்னாதிபதி என்று ஒரு குறிப்பு காணப்படுகிறது. முற்காலத்தில், தம்பதிகள், தாம்பத்தியம் மேற்கொள்ளும் காலத்தை வரையறுத்துக் கொண்டனர். அதை குறித்தும் வைத்துக்கொண்டனர். இதுவே நிஷேக லக்னம் என்பப்படும்.
இன்றைய காலகட்டத்தில் கூட சாந்திமுஹூர்த்தத்திற்கு நாளும், நேரமும் பார்ப்பது இதன் அடிப்படையே ஆகும். காலப்போக்கில் நிஷேகலக்னம் குறிக்கும் வழக்கம் மறைந்து போனது.
மேற்கூறிய ஸ்லோகப்படி இரண்டு உதாரணங்களை பார்க்கலாம்.
1] கருத்தரித்த முதலாவது மாதம். அதிபதி சுக்கிரனாவார். சுக்கிரனுடைய சுவை புளிப்பு. எனவே தாய்க்கு புளிப்பானவை தேவைப்படுகிறது. ஜோதிட ரீதியாக அப்போது சுக்கிரன் இருக்கும் நிலையறிந்து அதற்கான உணவை மேற்கொள்வதுடன், சுக்கிரனுக்குரிய தெய்வத்தை வழிபடுவதும் சிறப்புடையதாகும். சுக்கிரன் நீசமடைந்திருப்பின் சுக்கிரனுக்குரிய காரகத்துவ நோயான நீரிழிவுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதும் நல்லது. இக்காலத்தில் ஒரு பெண் கருவுற்றது உறுதியானவுடன், முதலில் நீரிழிவுக்கான பரிசோதனைகளை ஆங்கில மருத்தவர்கள் மேற்கொள்வதை நினைவிற் கொள்ள வேண்டும்.
2] ஒன்பதாம் மாதத்தில் மானிட ஜென்மத்தின் கவலைகள் சிசுவை பற்றுகிறது. அப்போது அதிபதியாக சந்திரன் இருப்பதால், அப்போது சந்திரனுக்குரிய காரகத்துவங்களில் ஒன்றான மனம் என்னும் தாயின் மனதை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மனோ ரீதியாக சோக, துயர சம்பவங்கள் பாதிக்காத வண்ண்ம் இருத்தல் நல்லது. முக்கியமாக சோக உணர்ச்சியை தூண்டக்கூடிய மெகா சீரியல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நலம். சந்திரன் காரகத்துவப்படி உணவை மேற்கொள்வது மிக நன்று. சந்திரன் கெடும் நாட்களில் சந்திரனின் காரகத்துவ நோய்களில் ஒன்றான நீர் சம்பந்தமான தொல்லைகள் அதிகரிக்கும். அதாவது கை, கால்களில் வீக்கம் ஏற்படுதல். அதை ஜோதிட ரீதியாக முன்பே அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்ளலாம். அத்துடன் அதற்குரிய தெய்வத்தை அன்னாட்களில் வணங்கியும் நிம்மதியடையலாம்.