கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை”

கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை” !!!

நன்னிலத்திற்கு அருகில் உள்ளது திருவாஞ்சியம் என்ற திருத்தலம். திருமகள் திருமாலை வாஞ்சித்து(விரும்பி) மணந்ததால் இத்தலத்தைத் திருவாஞ்சியம் என்று அழைத்தனர்.
மயிலாடுதுறை – பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாழவந்தநாயகி உடனுறை வாஞ்சியநாதர் திருக்கோயில். காவிரித் தென்கரைத் தலங்களுள் 70-ஆவது தலம்.
இங்குள்ள இறைவன் வாஞ்சியநாதர். இறைவி வாழவந்த நாயகி, மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலத்திலுள்ள “குப்த கங்கை’ என்னும் தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். கங்கையில் மூழ்கி தங்கள் பாவத்தைப் போக்குவதால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று சிவபெருமானிடம் கங்கை வேண்டினாள். அவரும், தான் மிகவும் விரும்பி இருக்கும் இடமும், பிரளய காலத்திலும் அழிவில்லாத தலமுமான ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து உன் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றார். கங்கையும் இத்தலத்தில் குப்த கங்கை என்னும் தீர்த்தமாக எழுந்தருளியுள்ளாள். எனவே, இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி, இறைவனுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் செய்து நெய் தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.
உலக உயிர்களைக் கொள்வதால் தனக்கு ஏற்படும் பாவம் நீங்க வழி தேடி தலங்கள் தோறும் சென்றார் இயமதர்மராஜன். இறுதியில் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் வேண்டினார். அருட்காட்சியளித்த ஈசன் ஸ்ரீவாஞ்சியம் வா என்று கூற, இயமதர்மனும் அங்கு சென்று ஸ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து பாவச்சுமையில் இருந்து விடுபட வேண்டினார். உலகத்தை இயக்குபவன் நானே! இதில் உன் செயல் ஒன்றும் இல்லை. எனவே, உன்னை பாவம் வந்து சேராது என்று கூறினார்.
மகிழ்ந்த இயமதர்மன் இத்தலத்தில் தான் எப்போதும் சேத்திர பாலகராக இருக்க வேண்டும் என்றும், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தன்னையே வாகனமாகக் கொண்டு இறைவன் உலா வந்தால், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் நீங்கும் என்றும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபடுவோர் மோட்சம் அடைய வேண்டும் என்றும் வேண்டினார். தன்னை வழிபட வருபவர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி எமதர்மனை வழிபடலாம் என்று அருளினார் இறைவன்.
தலவிருட்சம் சந்தனமரம். இயமன் பூசித்துப் பேறு பெற்றதால், இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இங்கு மூவராலும் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.