ராம நாம மகிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராம நாம மகிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ராம நாம மகிமை

ராம நாம மகிமை...!!!

போர் முடிந்து அயோத்தி திரும்பிய ராமன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!. இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் அரசவை வந்து ராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகம் மூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம் அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான் என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.

வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், இராமரிடம் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டுமென ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற் கொண்ட ராமனும் போருக்கு கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.

இராம பாணத்திற்கு முன்னால் ஏதும் செய்ய இயலாதென கூறிய நாரதர், இந்த உலகில் உன்னை காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு, அவள் உணக்கு அபயமளித்தேன் என சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட என்று கூறினார்.

அவள் அனுமனின் தாயாரான அஞ்சன தேவி...

அஞ்சன தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சன தேவி, தனது மகன் அனுமனை அழைத்து இவனை காப்பாற்று என கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன் தன் வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்த் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார்.

போருக்கு வந்த ராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ராமன் உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டார்.

ராமனும் ஆவேசமாக அம்புகளைத் தொடுக்க அவை அனுமனை தாக்காது அவர் காலடியில் விழத் துவங்கின....தொடரும் ராமனின் அம்பு மழையின் உக்கிரத்தால் உலகமெல்லாம் நடுங்கத் துவங்கியது. தேவர்கள் சிவபெருமானை அணுகி இந்த யுத்தத்தினை நிறுத்திட வேண்டினர். அவரோ இதை முடிக்க விசுவாமித்திரனால் மட்டுமே முடியும் என கூறிவிட்டார்.

தேவர்கள் விசுவாமித்திரரை சரணடைய, அவர் மனமிறங்கி போர்களம் வந்தார், அவருடன் நாரதரும் வந்தார். விசுவாமித்திரரின் வார்த்தையை ஏற்று ராமரும் போரை நிறுத்தினார். நாரதல் அனுமனின் வாலுக்குள் மறைந்திருந்த அரசனை அழைத்து விசுவாமித்திரரில் காலில் விழச்செய்தார். அப்போது விசுவாமித்திரரிடம் இவன் தலை இப்போது உங்கள் காலடியில் விழுந்துவிட்டது. இவனை மன்னித்து விடுங்கள் என கோரிக்கை வைக்க, விசுவாமித்திரும் மனமிறங்கி மன்னித்தார்.

அப்போது அங்கு வந்த ராமன், நாரதரிடம் எப்படி என் பாணங்கள் வலுவிழந்தன என கேட்டதற்கு....நாரதர், ராமா!, உன் பாணங்களை விட உன் நாம ஜெபம் சக்தி வாய்ந்தது என்பதை புரிய வைக்கவே இத்தனையும் நடத்தினேன் என்றார்..