கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்

கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்

பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன.

* இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

* வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ, கூடவோ செய்கிறது.

* தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

* காட்டு ஏலக்காய், கிருமிகளை அழிக்க வல்லது. அமோமம் சபுலேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜி பெரேசியே குடும்பத்தைச் சார்ந்த செடிகளின் உலர்ந்த பழங்களே காட்டு ஏலக்காய். பெரிய ஏலக்காய் அல்லது பேரேலம் என்று அழைக்கப்படுகின்றது.

* சால்கோன் என்ற கார்டோமோனின், அல்பினிட்டின், சபுலின் மற்றும் சினியோல் என்ற நறுமணமுள்ள மருந்துசத்து ஆகியன காணப்படுகின்றன. இவை, வயிற்றில் வளரும் தேவையற்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, செரிமான சக்தியை தூண்டி, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்று வலியை நீக்குகின்றன.

காட்டு ஏலக்காய் – 20 கிராம், இலவங்கப்பட்டை – 20 கிராம், சிறுநாகப்பூ – 20 கிராம், சுக்கு – 20 கிராம், மிளகு – 20 கிராம், திப்பிலி – 20 கிராம், வாய்விடங்கம் – 20 கிராம், மல்லிவிதை – 20 கிராம், ஆகியவற்றை சுத்தம் செய்து, இளவறுப்பாக வறுத்து, இடித்து, பொடித்து, சலித்து, 120 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர, நுண்கிருமிகளால் ஏற்பட்ட பல்வேறு வகையான வயிற்று உபாதைகள் நீங்கும்