பஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை

பஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

*திருவண்ணாமலை - அருணாசலேசுவர் - உண்ணாமுலையால் திருஅண்ணாமலை*

அருணாசலம் என்றால் அருணம் + அசலம் .  அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. இது நெருப்பு மலை. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார்.

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று வினவ, உருவான வடிவமேலிங்கோத்பவர் ( பல சிவாலயங்களில் சிவனின் கருவறையின் பின் உள்ள சிற்பம்) என்று அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வரகா (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் இலிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

*சொல்லிலக்கணம்*
***********************

திருவண்ணாமலை - அருணாச்சலம் - அண்ணாமலை

அண்ணாமலை - அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

*காலம்*
*********

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.  சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.

*தல வரலாறு*

திருவண்ணாமலை கோபுர தரிசனம்

*இலிங்கோத்பவர்*
************************

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் தனி ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும்.

மலை வலம்

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.

மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கிபி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.

பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.

இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ(நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ , வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டு செல்ல கூடாது.

கோயில் அமைப்பு

முதன்மைக் கட்டுரை: அண்ணாமலையார் கோயில் அமைப்பு

24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள்., கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

கோபுரங்கள்

அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.

மண்டபங்கள்

இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன.

சந்நிதிகள்

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

தீர்த்தங்கள் - சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

வழிபாடு

இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும்.

கரும்புத் தொட்டில்

குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களுக்கு குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.

விழாக்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில்

திருவிழா காலத்தில் வடம்பிடித்து இழுக்கப்படும் தேர்

பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆனி மாத பிரம்மோற்சவம்

ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன.

விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன.

மாசி மகம் தீர்த்தவாரி

அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி சிலை

வள்ளாள ராஜாவின் மகனாக சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியை சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் முதல் பத்து நாட்கள் உற்வர்களின் ஊர்வங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

பரணி தீபம்

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகாதீபம்

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.

மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்ததநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இந்த மகாதீபத்தினை பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.

பாடல் பெற்ற தலம்

திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.

அண்ணாமலையார் திருக்கோயில்

நால்வர்

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

அருணகிரி நாதர்

அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இங்குள்ள இறைவன் முருகன் மீது பாடல்களைப் பாடியுள்ளார். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள்.

நூல்கள்

இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம்,
அருணைக் கலம்பகம்
குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா,
தேவாரம்,
திருவாசகம்,
பதினொராந்திருமுறை,
பெரியபுராணம்,
கந்தபுராணம்,
திருப்புகழ்,
சோனசைலமாலை,
திருவருணைக்கலம்பகம்,
அருணாசல புராணம்,
அருணாசல மகாத்மிய வசனம்,
அருணகிரி அந்தாதி,
அண்ணாமலை வெண்பா,
திருவருணை அந்தாதி,
அண்ணாமலை சகதம்,
சாரப்பிரபந்தம்,
கார்த்திகை தீப வெண்பா,
சோணாசல வெண்பா,
சோணாசல சதகம்,
திருவருணைக்கலிவெண்பா,
திருவருட்பதிகம்,
அருணாசலேசுவரர் பதிகம் - 1,
அருணாசலேசுவரர பதிகம் - 2,
உண்ணாமுலையம்மன் சதகம்,
அருணாசலேசர் நவகாரிகை மாலை,
உண்ணாமுலையம்மன் வருகைப்பதிகம்,
அருணாசல சதகம்,
அருணாசல அட்சரமாலை,
அண்ணாமலையார் வண்ணம்,
திருவண்ணாமலைப் பதிகங்கள்,
அண்ணாமலைப் பஞ்ச ரத்னம்,
திருவருணைத் தனி வெண்பா,
அட்சரப் பாமாலை,
அருணாச்சலேசுவரர் உயிர் வருக்கம் படைத்தற் பாமாலை,
அருணசல அட்சரமாலை,
அருணாசலநவ மணிமாலை,
அருணாசல பதிகம்,
அருணாசல அஷ்டகம்,
அருணாசல பஞ்சபத்தனம் ஆகியவை இச்சிவாலயத்தின் புகழைப் பாடுகின்ற நூல்களாகும்.

தல சிறப்பு

இத்தலம் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.

நினைத்தாலே முக்தி தலமென சிவபுராணம் குறிப்படுகிறது.

காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் இதுவே.

அருணகிரி நாதருக்கு விழா எடுக்கப்படுகிறது.

ஞானிகளும் துறவிகளும்

இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.

அண்ணாமலை சுவாமிகள், அப்பைய தீட்சிதர், அம்மணி அம்மாள், அருணகிரிநாதர், அழகானந்த அடிகள், ஆதி சிவ பிரகாச சாமிகள், இசக்கி சாமியார், இடைக்காட்டுச் சித்தர் ,இரமண மகரிசி, இறை சுவாமிகள், ஈசான்ய ஞானதேசிகர், கண்ணாடி சாமியார், காவ்யகண்ட கணபதி சாத்திரி, குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், குருசாமி பண்டாரம், சடைச் சாமிகள், சடைச்சி அம்மாள், சற்குரு சுவாமிகள், சேசாத்திரி சாமிகள், சைவ எல்லாப்ப நாவலர், சோணாசலத் தேவர், ஞான தேசிகர், தட்சிணாமூர்த்தி சாமிகள், தம்பிரான் சுவாமிகள், தெய்வசிகாமணி சித்தர், பத்ராச்சல சுவாமி, பழனி சுவாமிகள், பாணி பத்தர், மங்கையர்கரசியார், ராதாபாய் அம்மை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், விசிறி சாமியார், விருபாட்சி முனிவர், வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.

தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் நிறைய உள்ளன.

போக்குவரத்து

இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மி, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மி தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வந்து செல்வதற்கு நல்ல பேருந்து வசதிகளை இத்திருத்தலம் கொண்டுள்ளது. ஒரு வழித்தடம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொறு வழித்தடம் திருபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், போலூர் வழியாகவும் செல்லுகிறது.

இத்திருத்தலம் வேலூரிலிருந்து 70 கி.மி. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 100 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் கிரிவலப்பாதையருகே உலங்குவானூர்தி இறங்குதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்கள் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து வந்து செல்ல முடியும்.

சேவார்த்திகளின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இதைத்தவிர தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் திருக்கோயிலைச்சுற்றி உள்ளன.

சிறப்புகள்

கார்த்திகை தீப பெருவிழா, இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது.

உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.

நினைக்க முத்தியருளும் நெடும் பதி.

அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.

ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)

இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம், வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

யாத்ரிகர்களுக்குரிய சத்திரங்கள், திருக்கோயில் விடுதிகள் முதலியவை உள்ளன.

மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.

கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.

உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது; அருகிலேயே அருணகிரிநாதரின் 'திருவெழுகூற்றிருக்கை' வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் படல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

மூவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.

குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன. (கல்வெட்டுக்களின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.)

இக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் :- நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம், திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம், (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம், வடலூர் இராமலிங்கசுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் - அருணாசலேஸ்வரர் பதிகம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்-அருணாசல பதிகம், யாழ்ப்பாணம் - நல்லூர் தியாகராஜப் பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம். இவையன்றி; உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம் அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.

வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

திருவண்ணா மலை கிரிவலம்

கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. கிரிவலம் பற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

திருமஞ்சன கோபுரம் - மலையின் பெருமை

இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.

சீல முனிவோர்கள் செறியு மலை..

சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..

ஞான நெறி காட்டு மலை..

ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..

– என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.

ராஜ கோபுரம்

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரிவலம்

இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நந்திகேஸ்வரர்

மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது.  இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.

வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.

அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது.  எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.

அண்ணாமலை
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

நந்தி

அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.

ஆதி அண்ணாமலை

அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.

சிறப்பு விமான தரிசனம்- கிரிவலம் செல்லும் முறை

நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.

திரிமூர்த்தி தரிசனம்- மலை வலம் வர உகந்த நாட்கள்:

எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

கிரிவல மகிமை

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

நந்தி முக தரிசனம்

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள்  செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

பலன்கள்

ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.

‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.

மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.

பூத நாராயணர்

ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்

திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.

புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.

வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.

சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.

இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா. இந்தத் திருவிழாவிற்கு ஒரு சுவாரஸ்யமான கதை கூறப்படுகிறது.

கைலாயத்தில் ஈசன் ஏகாந்த தவத்தில் ஆழ்ந்திருந்த போது உமை, ஈசனின் பின்புறமாய் வந்து நின்று விளையாட்டாய் அவர் இரு கண்களைப் பொத்தினாள்.அதனால் உலகம் இருண்டது. ஈசனின் வல, இடக் கண்களான சந்திர, சூரியர்கள் களையிழந்தனர். நெற்றிக் கண்ணாகிய அக்னியும் அன்னையின் கைவிரல் பட்டுக் குளிர்ந்து போனது. அதனால் வேள்விகள் தடைப்பட்டன. யாகங்களும், பூஜைகளும் இல்லாமல் போயின. உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கினர். அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது.

அடி அண்ணாமலையில் இருந்து…

இதனால் சினம் கொண்டார் ஈசன். உமை விளையாட்டாய் இந்தச் செயலைச் செய்திருந்தாலும் அது மிகப் பெரிய தவறு என்பதால், அன்னையைச் சபித்தார்.

அன்னை அஞ்சி நடுங்கி பிழை பொறுக்குமாறு வேண்ட, “ தேவி, நீ விளையாட்டாகச் செய்தாலும் தவறு, தவறுதான். ஆதலால் நீ பூவுலகம் சென்று தவம் மேற்கொள்வாயாக! தக்க காலத்தில் யாம் வந்து உம்மை ஆட்கொள்வோம்’ என்று கட்டளையிட்டார்.

அன்னையும் அவ்வாறே ஈசனின் கட்டளைப்படி பூவலகிற்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள்.  அவ்வாறு அன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று, சாப நிவர்த்தியான தலம் தான் அண்ணாமலை. சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது ”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலை நுனியில் காட்டா நிற்போம்

வாய்த்து வந்த சுடர்காணில்

பசிபிணி இல்லாது உலகில் மன்னி வாழ்வார்

பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு

தவிரும் இது பணிந்தோர் கண்டோர்

கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு

முத்திவரம் கொடுப்போம் என்றார்

– என இதை அருணாசல புராணம் சுட்டுகிறது.

அம்பாள்
“புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்

சித்திதரும் தீபம் சிவதீபம் – சக்திக்கு

உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்

பயிராகும் கார்த்திகைத் தீபம்

– என்கிறது தீப வெண்பா.

அர்த்தநாரீஸ்வரர்

‘குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி இதன் சிறப்பை விரித்துரைக்கிறது.

”அருணாசலத்தை கார்த்திகை தீபத்தின் போது வலம் வருவது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லதாகும். அருணாசலத்தில் தீபம் ஏற்றும் போது அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து விட்டுச் செய்யப்படும் கிரிவலத்தினால் அதுவரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். கிரிவலத்தினை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்வது அவன் அதுவரை செய்த அனைத்து பாவங்களையும் நீக்கி அவனை பரிசுத்தனாக்க வல்லது. பதினோரு நாட்கள் தொடர்ந்து செய்யும் கிரிவலம் அவனுடைய வினைகளை நீக்கி, ஸகல ஸம்பத்துக்களையும் கொடுக்கும். கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவனோ ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகிறான். தீபத்தன்று சிவலிங்கத்தின் முன்னால் நெய் விளக்கு ஏற்றுபவன் வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும். அந்த தீபத்தை வலம் வருவனின் ஒவ்வொரு அடிக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலனுண்டு. சகல தானம் கொடுப்பதால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ, சகல தீர்த்தங்களில் நீராடினால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ அது, கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தாலே கிடைக்கும். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நஷத்திரத்தில் சோணாசல ஷேத்திரத்தில் தீபமேற்றினால் சந்தான ப்ராப்தி உண்டாகும்.”

– என்றெல்லாம் அருணாசலத் தலவரலாறு மிகச் சிறப்பாக கார்த்திகை தீபமன்று கிரிவலம் வருவதன் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

கிரிவலம் வருவோம்!  கர்மவினைகளைக் களைவோம்!!

அருணகிரிநாதர்

சிற்றின்பத்தை நாடி, வாழ்வில் மனமுடைந்த அருணகிரிநாதர், வல்லாள மகாராஜகோபுரத்தில் ஏறி தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். அப்போது முருகப்பெருமான் அவரைத் தாங்கி உயிர்காத்து அருளினார். 'முத்தைத்தரு..' என அடியெடுத்துக் கொடுத்து திருப் புகழை பாடவும் வழிவகுத்தார். இதன்பின்னரே திருப்புகழ் தோன்றியது. இதேபோல வல்லாள மகாராஜனின் கண்நோய் தீர, இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டுவரச் சென்றார் அருணகிரிநாதர்.

மனித உடலோடு செல்லமுடியாது என்பதால், கூடு விட்டுக் கூடு பாயும் சித்தியை கையாண்டு, இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரை செலுத்தினார். அருணகிரிநாதரின் உடல் ஓரிடத்தில் மறைவாக இருந்தது. இந்த நிலையில் அருணகிரிநாதரின் மீது பொறாமை கொண்டிருந்த, சம்பந்தாண்டான் அவரது உடலை எரித்து விட்டான். திரும்பி வந்த அருணகிரிநாதர் தன் உடலைக் காணாது  கவலையுற்றார். பின்னர் கிளி உடலில் இருந்தபடியே கந்தரனுபூதி பாடினார். அதன் நினைவாகவே கிளி கோபுரமும், கிளியின் உருவமும் இன்றும் கோபுரத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

இடுக்குப் பிள்ளையார்

கிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாயில்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாயிலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இக்கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, பிற  நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கிரிவலம் வருவோருக்கு வலி குறையும் என்பது ஐதீகம்.

மலைதீபம்

மகாதீபம் ஏற்றுவதற்காக மலையின் உச்சியில் சுமார் 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட, ஐந்தரை அடி உயர கொப்பரை வைக்கப்படும். இதில் 600 லிட்டர் நெய்யும், 2 மூட்டை பஞ்சும் 15 மீட்டர் காடா துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்படும். இந்த அளவு படிப்படியாகக்  குறைக்கப்பட்டு வட்ட வடிவ இரும்புப் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதைக் கொப்பரை மீது வைத்து அகண்ட தீபம் ஏற்றப்படும். தொடக்கத்தில் மூன்று நாட்கள் ஏற்றப்பட்ட தீபம் நாளடைவில் பதினோரு நாட்கள் வரை ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றும் உரிமை பருவதராஜ குலத்திற்கு மட்டுமே உரித்தானது.

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள் நிறைந்த தலமாக திருவண்ணாமலை திகழ்கின்றது.

மலைப் பிரகாரத்தில்

சக்கர தீர்த்தம்,
அக்னி தீர்த்தம்,
பாண்டவ தீர்த்தம்,
பாலி தீர்த்தம்,
சிம்மத் தீர்த்தம்,
எம தீர்த்தம்,
சோண நதி,
உண்ணாமுலை தீர்த்தம்,
வருண தீர்த்தம்,
கட்க தீர்த்தம்,
பாத தீர்த்தம்,
முலைப்பால் தீர்த்தம் என தீர்த்தங்கள் நிறைந்துள்ளன.

இவற்றில் ஆலயத்துக்குள் இருக்கும்

சிவகங்கை தீர்த்தமும்,
பிரம்ம தீர்த்தமும் முதன்மையானவை ஆகும்.

அதேபோல, துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி  உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக விளங்குகின்றது.

பவழக்குன்று

அன்னை உமாதேவி திருவண்ணாமலையில் தவமியற்றிய  மலையே பவழக்குன்று என அழைக்கப்படுகின்றது. இம்மலை கிரிவலம் முடிக்கும் இடத்திற்கு முன்பாக, துர்க்கை அம்மன் சன்னிதியை ஒட்டிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இம்மலையிலும் ரமணர் சிறிது காலம் தவமியற்றியுள்ளார். இம்மலையைக் கண்டாச்சி புரம் அழகானந்தா சுவாமிகள்  பவழக் குன்று மடம் அமைத்து பராமரித்து வந்தார்.

கரும்பு தொட்டில்

இத்தலத்து இறைவன் வல்லாள மகாராஜனின் வேண்டு கோள்படி அவருக்கு மகனாகப் பிறந்து அருள் வழங்கியதால் குழந்தைப்பேறு தரும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். இதனால் குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து ஆலயத்தைச் சுற்றி வருவது வழக்கம். இது அரிதான வேண்டுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பத்து இளையனார் சன்னிதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தை அடுத்து இடதுபுறம் கம்பத்து இளையனார் சன்னிதி அமைந்துள்ளது. விஜய நகர மன்னனால் கட்டப்பட்டது. பிரபு தேவமகாராஜன் முன்னிலையில், அரசவைக் கவிஞர் சம்பந்தாண்டான் அருணகிரியிடம் ஆணவ சவால் விடுத்தான். எவரது கவிக்கு சக்தி இருக்கிறதோ, அவர்களுக்கு இறைவன் காட்சி கொடுப்பான் என்பது. அருணகிரிநாதர் தன் கவிப்பாடலில் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கிய முருகப்பெருமான், கம்பத்தில் தோன்றி அருணகிரிநாதருக்கும் அடியார்களுக்கும் அருள்புரிந்தார் எனப் புராணம் கூறுகிறது. அதனால்தான் இவ்விறைவன் கம்பத்து இளையனார் என்று பெயர்  பெறுகின்றார்.

மலையின் மகிமை

பொதுவாக மலைமீது தான் இறைவன் குடியிருப்பது வழக்கம். ஆனால் மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலையில் மட்டுமே காணப்படும் சிறப்பு. மலையின் உயரம் 2688 அடி. மலையின் சுற்றுப் பாதையின் 14 கிலோமீட்டர் ஆகும். கிரிவலப் பாதையின் பல இடங்களில் இருந்து மாறுபட்ட பல வடிவங்களில் மலை காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம். அருணன் என்றால் சூரியன் எனப் பொருள். அசலம் என்றால் கிரி அல்லது மலை என்று பொருள். ஜோதி வடிவாக இறைவன் மலைஉருவில் காட்சி தருவதால் அருணன் அசலம் என்பது அருணாசலம் ஆனது.

இம்மலை கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும்  விளங்குகிறது எனப் புராணம் கூறுகிறது. இம்மலை நெருப்பினால் உருவான மலை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மலையைச் சுற்றி எட்டுத் திக்கிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் எண்திசைகளிலும் அமைந்துள்ளன. குபேர லிங்கத்திற்கு முன்னதாகவே பஞ்சமுக மலை தரிசனத்தைக் காணலாம். இதையடுத்து வருவது இடுக்குப் பிள்ளையார்.

மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆல மரத்துக் குகை, ரமணமகரிஷி குகை எனப் பல்வேறு குகைகள் அமைந்துள்ளன. அண்ணாமலை லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையைச் சுற்றும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் தீரும் என்பது ஐதீகம். பவுர்ணமி தினம் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு என்பதால்  அதற்கேற்ப மலையைச் சுற்றலாம்.

கிரிவலத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய கிரிவல நியதிகள்:

கிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய கிரிவல நியதிகள்அண்ணாமலையின் கிரிவலம் எல்லா உலகங்களையும் வளம் வந்ததற்குச் சமமாகும். பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி தேவை. அத்தோணி என்பது திருவண்ணாமலையின் கிரிவலம்தான் .அது ஏழு விதமான நரக குழிகளில் விழுந்து விடாமல் முக்தி என்னும் மோட்ச வீட்டை அடைவதற்கு ஏணியாக இருந்து உதவி செய்கிறது இந்த கிரிவலம்.

இந்த அருணாச்சலத்தை வலம் வருவதால் கிடைக்கின்ற பலன்களுக்கு நிகராக வேறு பலன்களைச் சொல்ல இயலாது. காசி, அயோத்தி, மதுரை, மாயாபுரி, அவந்தி, துவாரகை, காஞ்சிபுரம் முதலான புண்ணிய நகரங்களில் ஒரு கற்பகாலம் (432 கோடி ஆண்டுகள்) தவம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட அருணாச்சல கிரிவலத்தால் கிடைக்கும் நன்மை மிக அதிகம்

இந்த அருணா கிரிவலமானது பல ஆண்டுகள் அருந்தவம் செய்து பெறுகின்ற நன்மைகளை விட ஒரு முறை கிரிவலம் வருவதால் அதிக நன்மைகள் பெறலாம். குருமூர்த்தி சொல்லியவாறு சமாதியிலிருந்து அடைகிற அஷ்டமாசித்திகளை விட இந்தக் கிரிவலம் வருவதால் அதிக சித்திகளை பெறலாம்.

அகன்று ஓடும் நர்மத நதி அளவு கள்ளைக் குடித்த பாவம் கூட திருவன்னமலையை வலம் வந்தால் தீர்ந்துவிடும்.

அண்ணாமலையை வளம் வரவேண்டும் என்று நினைத்தாலே போதும்.அந்த கணமே சூறாவளி காற்றுக்கு முன் உள்ள தீபம் அணைந்து போவது போல அவனுடைய் பாவங்கள் அணைந்து போய்விடும்.

நாம்நல்ல கல்விச் செல்வத்தைப் பெற விரும்பிநாளும், நல்ல மழலைச் செல்வத்தை பெற விரும்பினாலும் , அரசர்/அரசாங்கத்தை வயபடுத்த விரும்பினாலும்,நல்ல மாதரை பெற விரும்பினாலும் இந்த திருமலையை அவசியம் வலம் வருதல் வேண்டும்.

திருவண்ணாமலை கிரிவல நியதிகள் :
கிரிவலம் என்பது விரைவாக கடந்து அல்லது விரைவாக ஓடிமுடிக்க வேண்டிய ஒரு வழிபாடு அல்ல. அது ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடப்பதைப் போல மெதுவாக அடி மேல் அடி வைத்து மிக பொறுமையாக வலம் வர வேண்டும்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் ஒவ்வொரு காலசைவும் ஒரு முக்கியத்துவம் பெறுவது போல திருவண்ணா மலையின் கிரிவல யாத்திரையில் ஒவ்வொரு அடியும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

திருவண்ணா மலையை வலம் வரும்போது அன்று பெண்களின் சேர்க்கைப் பற்றி கனவிலும் நினையாத வண்ணம் தூய்மையான நீரில் நீராடி தூய்மையான ஆடையுடுத்தி விபூதி அணிந்து மெளனமாக வலம் வருதல் வேண்டும்.

இந்த கிரிவலத்தின் போது உடம்பில் சட்டையோ போர்வையோ அணிவது கூடாது.வெயிலுக்கோ அல்லது,மழைக்கோ குடைப் பிடித்து கொண்டு போகக்கூடாது.கால்களில் மிதியடிகளும் அணியக்கூடாது . காரணம் வழியெங்கும் அரூப வடிவில் சித்தர்கள் சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிப்பட்டு, வலம்
வந்து கொண்டிருப்பர். ஆதலால் அவர்களின் வழிபாடு ஏதும் பாதிக்க படக்கூடாது. என்ற எண்ணத்துடனே கிரிவலத்தைத்துவங்க வேண்டும்.

மலை வலம் வருகிறவர்கள் மலை வலத்தின் போது தானங்கள் செய்யலாமே தவிர பிறரிடம் இருந்து தானங்கள் எது பெறக்கூடாது என்பதும் எந்தவித வாகனங்களும் மலை வலம் கூடாது என்பதும் முக்கிய நியதியாகும். இதுவே இப்படிஎன்றால் தாம்பூலம் தரித்தல், போதை பொருட்களை உபயோகித்தல் கூடாது. உணவு உண்ணுதலுக்கு கூட கிரிவலத்தின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணா மலையைக் கிரிவலம் வரும் முறையில் லட்சத்து எட்டு வகைகள் உண்டு என புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு கிரிவல முறைக்கும் ஒவ்வொரு விதமான தெய்வீகப் பலன்கள் உண்டு . கிரிவலம் செய்கின்ற நாள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பழங்கள் மாறுபாடடையும் .

இப்படிப் பல்வேறு கிரிவல முறைகள் இருந்தாலும் சித்தர்கள் சிறப்பாக வலியுறுத்துவது அமாவாசை மற்றும் பௌர்ணமி கிரிவலங்களை மட்டுமே. முன்பெல்லாம் அமாவாசை ,பௌர்ணமி நாட்களில் மட்டுமே கிரிவலம் நடைப்பெற்றது. இப்போது மாதத்தின் எல்லா நாட்களிலும் கிரிவலம் நடைபெறுகிறது.

கோயிலின் உள்ளே தெற்குக் கோபுர வாயிலருகே உள்ள பிரம்ம லிங்கத்தில் தொடங்கி ,தெற்கு வாசல் வழியிய வெளிவந்து கிரிவல பாதையில் அமைந்துள்ள பலவேறு ங்கங்கள், ததீர்த்தங்கள், நந்திகள், ஆகியவையை தரிசித்தவாறே இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகிய அமைந்துள்ள பூத நாராயணர் சந்நிதியில் யாத்திரையை முடிப்பதுதான் முழுமையான கிரிவலம் என்று கூறப்படுகிறது.

கிரிவலம் வந்த பின்னர்,அண்ணாமலையார் ஆலயத்தின் உட்ப்ரகாரத்தில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள துர்வாசமுனிவரை வணங்கி , பின்னரே அண்ணாமலையாரையும்,பின்னர் உண்ணாமுலையம்மயாரையும் தரிசித்தல் வேண்டும்.

திருவண்ணமலை கிரிவலத்தின் தனி சிறப்பு எனவென்றால் இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் பகலோ, இரவோ,அந்தியோ, சந்தியோ,வெயிலோ,மழையோ , என்ட்ஜ்ஹா நேரமும் யாரவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள் .

கந்தவர்கள் , தேவர்கள், மகரிஷிகள் சித்தர்கள், வேற்றுலகவாசிகள் ஆகியோர் இந்த மலையை பூலோக நியதிகளுக்கு ஏற்றவாறு மானுட வடிவிலோ அல்லது அரூப வடிவமாகவோ கிரிவலம் செய்த வண்ணம் இருப்பார்கள்.

இதில் ஆச்சர்யப்படத்தக்க செய்தி என்னவென்றால் நாம் இம்மலையை கிரிவலம் செயும்காலங்களில் இவர்கள் நம் கண்ணங்களில் அபூர்வமாக தென்படுவார்களாம்.அவர்களை இனம் காணும் கொடுப்பினை இருந்தால் நமக்கு அவர்களின் அருளாசியும் கிடைக்குமாம்

திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் தற்போது உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.*

கிரிவலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆர்வத்தாலும், பக்திமிகுதியாலும் திருவண்ணமலைக்கு வந்து ஏதோ ஒரு வகையில் கிரிவலம் செய்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதற்கு சில நியமங்கள் உள்ளன.

14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில் கிரிவலத்தை துவக்க ராஜகோபுரமே சிறந்த இடம். இறைதரிசனம் முடித்து ராஜ கோபுரத்தில் வீற்றிருக்கும் செல்வக்கணபதியைக் கைதொழுது கிரிவலம் துவக்க வேண்டும். அமைதியான முறையில், வேகமாக நடக்காமல், மிதமான கதியில் நடந்துதான் கிரிவலம் செய்ய வேண்டும். வாகனங்களில் செல்வது விரும்பத்தக்கதல்ல. மனதில் சிவ நாமங்களைக் கூறி ஜபித்தபடி கிரிவலம் செய்ய வேண்டும்.

தென் கிழக்குத் திசையில் அமைந்துள்ள இந்திரன் தொழுத லிங்கமான இந்திர லிங்கமே அஷ்டலிங்கங்களில் முதல் லிங்கம். இங்குதான் அஷ்ட லிங்க தரிசனம் தொடங்குகிறது. பிறகு அக்கினி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், சூரிய லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என அஷ்ட லிங்கங்களையும் தரிசித்த படி கிரிவலம்
வரவேண்டும்.

கிரிவலப் பாதையில் சேஷாத்திரி சுவாமிகள்ஆசிரமம், ஸ்ரீ ரமண ஆசிரமம், நந்திமுக தரிசனம், திருநேர் அண்ணாமலை. ஆதி அருணாச்சலேஸ்வரர்
ஆலயம், இடுக்குப் பிள்ளையார் கோயில், பஞ்ச முக தரிசனம் உட்பட பல கோவில்களும், சிறிய ஆலயங்களும் உள்ளன. தங்கள் நேரத்திற்கும், உடல்நிலைக்கும் ஏற்றவாறு பக்தர்கள் இவற்றையும் தரிசனம் செய்தல் நலம்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலனை வழங்குவதில் வல்லவர் அருணைவாழ் ஈசர். என்ற போதும் ஐப்பசி, கார்த்திகை. மார்கழி போன்ற மாதங்களும், எல்லா மாதங்களின் பௌர்ணமி தினமும், பிரதோஷ காலமும், சிவராத்திரி, அமாவாசை போன்ற நாட்களிலும் கிரிவலம் செய்வது சிறந்த பல பலன்களைக் கொடுக்கும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் கிரிவலம் செய்வோருக்கு சிவபதவி கிட்டும்.

திங்கள் கிழமை கிரிவலம் இந்திர பதவி தரும்.

செவ்வாய் கிரிவலம் வறுமையையும், கடனையும் நீக்கும்.

புதன் கிரிவலம் கலைகளில் தேர்ச்சியும், படிப்பில் உயர்நிலையும் தரும்.

வியாழக்கிழமை கிரிவலம் ஞானத்தைக் கொடுக்கும்.

வெள்ளிக்கிழமை கிரிவலம் இக. பர முகங்களையும், லஷ்மி கடாக்ஷத்தையும் தரும்.

சனிக்கிழமை கிரிவலம் நவக்கிரக தோசத்தை நீக்கும். மன நிறைவு கிட்டும்,

தோசம் நிவர்த்தி, சகல வியாதிகளும் குணம் அடையும் இது உட்பட எல்லா
பலன்களும் கிரிவலத்தால் கிடைக்கின்றன.

கிரிவலம் வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் தீய வார்த்தைகளைப் பேசக்கூடாது.

கிரிவலம் செல்ல பௌர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரி ஆகிய நாட்கள் சிறந்தவை.

எந்த இடத்திலிருந்து தொடர்ந்தோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது, அருணாசல புராணம்.

சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையாரின் கிழக்கு கோபுரத்தின் முன் பசுநெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் ஆலயத்தில் பூக்களை தானமளித்து
கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிழக்கு கோபுர வாயிற்படியில் அருளும் லட்சண விநாயகரை சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து வணங்கி பின் அண்ணாமலையாரை  தரிசிக்க வேண்டும். இதற்கு லட்சண திருமுக தரிசனம் எனப் பெயர். அதன் பின் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறே கிரிவலம் வந்தால்  செல்வ வளம் பெருகும்.

எமலிங்கத்தின் அருகே இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும். முடியாதவர்கள் அத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து அதை பிரசாதமாகப் பெற்று எமலிங்கத்தின் வாயிலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஔதும்பர தரிசனம் என்று பெயர். இது நீடித்த ஆயுளைத் தரும்.

கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது பரஞ்ஜோதி  தரிசனம் என அழைக்கப்படுகிறது.

குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை வைவஸ்வதலிங்கமுக தரிசனம் என்பார்கள்.

பூதநாராயணப் பெருமாளை தரிசித்து நம் பொருளாதார பிரச்னைகளுக்கு அவரிடம் பிரார்த்தனை செலுத்தி பின் அண்ணாமலையை  தரிசிக்க வேண்டும். இது சத்தியநாராயண தரிசனம் எனப்படுகிறது.

கிரிவலம் வரும்போது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும்.

கிரிவலத்தின் போது ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப் பாளோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சத்தம் கேட்காதபடி நடக்க வேண்டும்.

நீராடி, மடித்துணி உடுத்தி, விபூதி-ருத்ராட்சம் தரித்து கிரி பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக்கு அணி யலாம்.   
நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.

பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும்.

பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அண்ணாமலையாரை அர்ச்சித்து மௌனமாக கிரிப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்  பாவங்கள் பறந்தோடும்.

கிரக பீடைகள் நீங்க விரும்புவோர் சனிக்கிழமையில் அண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும்.

எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிப் பிரதட்சிணம் செய்யக்கூடவே கூடாது.

நிலைத்த இளமை வேண்டுவோர் கிரிவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தல் வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

மற்ற தலங்களில் தவமிருந்தால் முக்தி கிட்டும்; இங்கோ, நினைத்த மாத்திரத்திலேயே முக்தி கிட்டும். எனவே முடிந்த போதெல்லாம் அருணாசல மலையை தியானிக்க வேண்டும்.

உலகில் எவ்வளவு தவங்கள் உண்டோ அவ்வளவு தவங்களின் பலனையும் கிரிப்பிரதட்சிணம் ஒன்றே தரும் என்பதால் ஆழ்ந்த நம்பிக்கையோடு செல்லவேண்டு