பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

* பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.

* ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்றவற்றை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மென்று சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

* பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.

* பழங்களை ஜூஸாக்கும்போது, நார்ச்சத்துக்கள் அகன்றுவிடும். மேலும், நுண்ஊட்டச் சத்துக்களும் கிடைக்காது.

* பழங்களை நறுக்கிச் சாப்பிட விரும்புபவர்கள், பெரிதாக நறுக்கிச் சாப்பிட வேண்டும். சிறியதாக நறுக்கிச் சாப்பிடக் கூடாது.

* பழங்களின் விதைகளை நேரடியாக விழுங்கக் கூடாது, எனவே, பப்பாளி, ஆப்பிள், திராட்சை முதலான பழங்களில் இருக்கும் கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும்?

*பொதுவாக, பழங்களை உணவுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

* உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, பழங்கள்தான் முதலில் ஜீரணம் ஆகும். உணவு, அரை மணி நேரம் கழித்துத்தான் ஜீரணம் ஆகும். இதனால், செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

* சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது தவறான பழக்கம். ஆரம்பகட்டத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் வராது. தினமும் உணவு உண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது தொடர்ந்தால், படிப்படியாகச் செரிமான மண்டலம் பாதிப்படையும்.

* உணவு உண்பதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட வேண்டும். பழங்களைச் சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்வது நல்லது.

* நன்றாகப் பசிக்கும்போது பழம் சாப்பிடுவது உடனடி எனர்ஜி தரும். அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து உணவைச் சாப்பிடலாம்.

* ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.