வெற்றி பாதை...

வெற்றி பாதை...!

காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி உறுதி.

நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும்.

எடுத்த காரியத்தில் வெற்றி பெற

அ. கண்ணைத் திறந்து கனவு காண்க.

இன்று நடந்த சாதனை நேற்று வரை. தீவிரத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட்ட கனவு தான். கனவில்லாத கண்கள், கவிதை யில்லாத தேசம் போல. ஆனால், கனவு காண்பதும் ஒரு கலை தான். ஆயிரமாயிரம் விண்மீன்களில் ஒன்று தான் ஆதித்தனாகச் சுடர் விட்டு உலகின் வாழ்க்கைக்கு ஆதார மாகச் சுழல்கிறது. அது போல, எத்தனையோ கனவுகள் நம் சித்தத்தின் முற்றத்தில் சிறகடித்தாலும், ஒரு சில மட்டுமே ஒளிர்கின்றன. பல உதிர்ந்து போகின்றன. சில புள்ளிகளா கின்றன. வாழ்வின் அறுதி லட்சியம் என்று ஒன்று உங்களுக்கு இருக்கு மானால் அது காட்டுத் தீ போல், மற்ற கனவுகள் எல்லாவற்றையும் உண்டு கொழுந்துவிட்டு எரிகிறது.

‘பெரிதினும் பெரிது கேள்’
எந்தக் கனவில் நினைவின் அம்சம், நிஜத்தின் தன்மை தூக்கலாக இருக்கிறதோ அந்தக் கனவு உயிர் பெற்று நிறைவேறுகிறது. எந்தக் கனவு மறு படி மறுபடி காணப்படுகிறதோ அது நிறை வேறுகிறது. எந்தக் கனவு அந்தரங்கத்தில் இடை விடாது பேணப்படுகிறதோ அது நிறைவேறுகிறது. ஆகவே, realistic dreams என்றால் உயிர்ப்புள்ள கனவுகள் என்றே பொருள்.

ஆ. ‘முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி’

இது பாரதியின் வாக்கு. வாக்குமூலம் என்றும் சொல்லலாம். நம் வீட்டுக் கதவைத் தட்டி. நம் கண்முன்னே நிற்கும் காரியங்களை உடனடியாகச் செய்து முடித்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். கனவு நிறைவேற்றம் என்பது, கடமைகளைச் சோர்வின்றிச் செய்வதில் ஆதாரப்பட்டிருக்கிறது. வேறேதோ பெரிதாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பில், கண்முன்னே தென்படும் கடமையைச் செய்யாதிருப்பது, கனவையே கோட்டை விடும்படி ஆகிவிடும்.
ஒரு மகானை அவர் செய்யும் மகத்தான காரியங்களைக் காட்டிலும் சின்னச்சின்ன செய்கைகளிலும் அவற்றின் விவரங்களிலும் அவர் காட்டும் கவனம், அக்கறை இவற்றின் மூலமே என்று புரிந்து கொள்ளலாம்.
நோய்களின் தலைவன் புற்றுநோயோ, தொழுநோயோ அல்ல. நம்மை வாழவே விடாமல் செய்யும் நோய் ஒன்று இருக்கிறது. அதுதான் ஒத்திப் போடுவது.
தனக்கான கடமையைத் தட்டாமல் உடனடி யாகச் செய்பவனே வாழ்வில் உயர்கின்றான்.

இ. ‘செய்வன திருந்தச் செய்’

ஔவையின் இந்த அமிழ்த மொழியை எப்படிப் புரிந்து கொள்வது? கீதை, Yoga is skill in action என்கிறது. ‘செய்கையில் நேர்த்தியே யோகம்’ என்று தமிழில் வடித்தான் பாரதி. சிலர் பென்சில் சீவுவதைப் பார்த்தால் மரத்தை வெட்டிப் போட்டது போலிருக்கும். சிலர் மரத்தை வெட்டினாலும் பென்சில் சீவியது போலிருக்கும். சிலர் சாப்பிடும் இலையைப் பார்த்தால் போர்க் களம் போலிருக்கும். சிலர் சாப்பிட்டபின் அந்த இலையில் இன்னொருவர் சாப்பிடலாம் போலிருக்கும். சிலர் கார்டில் கம்ப ராமாயணம் எழுதுவார்கள். சிலர் ஒரேயொரு சேதியை நிதானமாகவும் நிறைவாகவும் சொல்லிச் செல்வார்கள்.
இரண்டு ஜோடி செருப்புகளை இங்கும் அங்குமாகச் சிதறவிடாமல் இணைத்து வைத்தால் அங்கே ஒரு கவிதைக்கான தறுவாய் தென்படும். ஒரு பக்கம் எழுதி வீணான காகிதங்களைக் கத்தரித்து நேர்த்தியாக வைத்துக் கொண்டால் எத்தனையோ செயல்களுக்குத் தோதாக இருக்கும். சில பெண்கள் விளக்கேற்றினால் தீபம் முத்துச் சுடர் போல் தவம் செய்வோனின் உள்ளம் போலப் பொலிந்து நிற்கும். சிலர் காய்களை நறுக்கிப் போடும்போது ஒவ்வொரு துண்டும் ஒரே அளவாக இம்மி பிசகாமல் இருக்கும்.
ஆக, எதை செய்தாலும் அதில் ஓர் எழில் தோன்றும்படிச் செய்வதே நேர்த்தி. அதுதான் திருத்தம்.
மேலும், எந்த செயலையும் அது உண்பது, உறங்குவதாக இருந்தாலும், ஓர் ஆராதனை உணர்வோடு, அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யும்போது, அந்த திருத்தம் உள்ளத்திலும் நேரும். உள்ளம் திருந்தும். உயிர் ஒளிரும்

ஈ. ‘பலன் கருதாமல் உழைக்கச் சொன்னாள்

. பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்’
இதுவும் பாரதி சொன்னதுதான். வாழ்ந்து, அதைச் சொன்னதால்தான் வார்த்தை வாக்காகி வரிகள் வாசகமாகின.

காரியத்தில் வெற்றி என்பது கணப் பொழுதில் நடப்பதில்லை. இன்று விதையூன்றி, நாளை கனி பறிக்க முடியாது. விடாமுயற்சியுடன் கூடிய சிறந்த செயல் திட்டம் வெற்றி பெறும்