அழகுக்கு சில குறிப்புகள்

அழகுக்கு சில குறிப்புகள்...!!!

கோடைக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் வெயிலின் கோரப் பிடி இன்னும் குறையவில்லை, வரும் காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். இதனால் சருமம் வறட்சி காணும். இக்காலங்களில் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

முகக்கறுப்பு மாற

பாதாம் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சம அளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.

பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.

முகப்பரு மாற

புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.

சருமம் மெருகேற

வறட்சியான சருமம் கொண்ட பெண்கள் தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் கலந்து அதில் பயிற்றம் மாவு சேர்த்து சருமம் எங்கும் பூசி 20 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் மெருகேறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடித்து அதில் பால் சேர்த்து நன்கு குழைத்து மேனி எங்கும் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் சருமம் பளபளக்கும்.

முகச் சுருக்கம் நீங்க

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகச் சுருக்கம் நீங்கும்.