3 கோடி விரத பலன் தரும் உத்தம சிவராத்திரி!

3 கோடி விரத பலன் தரும் உத்தம சிவராத்திரி!


வரும் 7ம் தேதி (07-03-2016) மஹா சிவராத்திரி விரதம் இருந்தால், 3 கோடி சிவராத்திரிக்கு விரதம் இருந்த பலன் கிடைக்கும்’ என, காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் ஸ்தானிகர் ராஜப்பா குருக்கள் தெரிவித்தார்.

இது குறித்து, ராஜப்பா குருக்கள் மேலும் கூறியதாவது:சைவ மதத்தில், சிவனை வேண்டியிருக்கும் விரதங்களில், மகா சிவராத்திரி விரதமே அதிக சிறப்புடையது. சிவராத்திரி விரதம், உத்தமம், மத்தியமம், அதமம் என, மூன்று வகைப்படும்.

சிவராத்திரி அன்று இரவில், நிசியில் சதுர்தசி திதி இருப்பது முக்கியம் என, பல ஆகமங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று திரியோதசி திதியும், அன்று இரவே சதுர்தசி திதியும் இருப்பது, உத்தம சிவராத்திரி என்பதாகும்.

அந்த நாள், இவ்வாண்டு மார்ச், 7ம் தேதி வருகிறது. அன்றைய தினம், திரியோதசி திதி பகலிலும், சதுர்தசி திதி இரவு முழுவதும், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும் இருப்பதால், இது உத்தம சிவராத்திரி ஆகும்.

உத்தரகாரண ஆகமத்தில் உள்ளபடி, திங்கட்கிழமையும், சிவராத்திரியும் ஒன்று சேர்ந்தால் அது, 3 கோடி சிவராத்திரிக்கு சமமாகும்.

இந்த ஆண்டு மார்ச், 7ம் தேதி, திங்கட்கிழமையும், சதுர்தசி திதியும் சேர்ந்துள்ளதால், 3 கோடி சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன பலனோ, அந்த பலன், அன்று விரதம் இருந்தால் கிடைக்கும்.

எனவே, அனைவரும் அவரவர் வழக்கப்படி, இந்த சிவராத்திரி விரத நாளில், கோவிலுக்கு சென்று வழிபடுவதும், இரவு முழுவதும் கண் விழித்து, சிவ நாமத்தை உச்சரித்தும், சகல சவுபாக்கியங்களையும் அடைய வேண்டும்" இவ்வாறு குருக்கள் தெரிவித்தார்.

அனைவரும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபட்டு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலனை பெற்றிடுங்கள்!