தெரிந்த பெயர் தெரியாத விபரம் : ஆலமரம்

தெரிந்த பெயர் தெரியாத விபரம் : ஆலமரம்


மனிதர்களுக்கு இல்லாத பல மகத்துவங்கள் மரங்களுக்கு இருக்கின்றன. இது இறைவனின் படைப்பின் விசித்திரம்.

'சபைதனிலே நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்' என்பது பாடல். அறிவற்றவனைப் பார்த்து 'ஏன் நெடுமரம் போல் நிற்கிறாய்'? எனக் கேட்பது பொது வழக்கு.

மரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மைகள்; குணாதிசயங்கள் உள்ளன. அனைத்தும் மனித குலத்திற்குப் பயன்படவே தம்மை அர்ப்பணித்து வாழ்கின்றன.

உயிருடன் இருக்கும் பொழுது காய், கனி, பூ, பிஞ்சு, கிழங்கு எனத் தந்து உணவாகின்றன.

இறந்தும் நமக்கு உணவு சமைக்க விறகாகின்றன. அது போலவே விலங்கினங்கள் இருந்தும் இறந்தும் பயன்படுகின்றன. ஒரு சில மனிதர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இருந்தும் பயனில்லை, இறந்தும் பயனில்லை.

பூமிக்குப் பாரம்- சோற்றுக்குக் கேடு.

இனி ஆலின் மாண்பைக் காண்போம். ஆலமரம் ஒன்றுதான் அதன் சிறப்பை நோக்கிப் பத்திற்கும் மேற்பட்ட பெயர்களினால் அழைக்கப் பெறுகின்றது.

கான்மரம்- தனிமரமே தோப்பாகும் அதிசயம். அடையார் கலாஷேத்திரத்திற்குச் சென்றால் இதனைக் காணலாம்.

ந்யக்ரோதம்- கீழ் நோக்கி வளரும் இயல்பினைக் கொண்ட வேரை உடையது. மேலே செல்லாமல் மட்டமாக வளரும்.

தொன் மரம்- பல நூற்றாண்டுகள் வாழும்.

பழுமரம்- எண்ணிக்கையற்ற பழங்களைக் கொண்டிருக்கும்.

பாலி- பால் உடையது. ஆலம் பால் உறுதி பயக்கக்கூடியது. கிராமத்து மக்கள் இன்னும் பல்துலக்கும் தூரிகையாக ஆலம் விழுதை உபயோகித்து வருகின்றனர்.

முதுமையிலும் அவர்கள் பற்கள் விழுவதில்லை. இதைக் குறித்துத்தான் 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற தொடர் தோன்றியது.

கோளி- பூ வெளியே தெரியாது.

பூதவம்- புனிதம் நிறைந்தது.

சிவம்- மங்கலத் தன்மையுடன் விளங்குவது.

பகுபதம்- பல வேர்களைக் கொண்டது.

வடம்- கவிந்திருப்பதன் காரணம்.

வனஸ்பதி- பூ இல்லாமல் காய்த்துப் பழம் தரும்.

ஆல், அரசு, அத்தி அம்மூன்றுமே பூவாகாமல் காய்க்கும் உயர்ந்த தன்மையைக் கொண்டன.

உலகத்தை உண்ட மாயனாம் கண்ண பரமாத்மா ஆலிலையில் உறங்குகின்றான். ஆலம் இலை 'வெல்வெட்' போன்று மிகமிக மிருதுவாக இருக்கும். ஆலிலையில் ஜீவரசம் அதிகம்.

எத்தனை வாடினாலும் மற்ற இலைகளைப் போல் உடைவது இல்லை. வாடிய ஆலிலையின் மேல் சிறிது நீர் தெளித்தால் மீண்டும் புதிய தோற்றம் பெறும். மேலும் ஆலம் இலையில் வைத்து உணவு உண்டால் அது மருந்தாக மாறி வயிற்று நோய், குடற்புண்களை அகற்றுகின்றது.

மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் காரடையா நோன்பை (சாவித்திரி விரதம்) சுமங்கலிப் பெண்கள் தமது கணவரின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தித்து கடைப்பிடிப்பார்கள். காட்டில் இருந்த சாவித்திரி சத்தியவான் நலத்திற்காக கார் அரிசியில் அடைசெய்து தேவிக்குப் படைத்து வழிப்பட்டதால் 'காரடையா நோன்பு' என்று பெயர் பெற்றது என்றும் கூறலாம்.

அல்லது இவ்விரதத்தைக் கைக்கொள்பவர்களின் வாழ்வில் கார் (இருள்) அடையாது என்பதனாலும் இப்பெயர் பெற்றது என்றும் கூறலாம்.

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி அன்னதானக் கந்தனுக்கு நாள்தோறும் 21 ஆலம் இலைகளில் பயற்றம் பொங்கலைப் படைக்கிறார்கள்.

அதனை 'மருந்து' என மக்கள் மனமார வணங்கி ஏற்கின்றார்கள்.தீரா நோய்கள் தீர்கின்றன.

அந்தணக் குடும்பத்தில் முதல் கரு வாய்த்திருக்கும் பெண்களுக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்று பும்சுவனம். இது கருத்தரித்த மூன்றாம் மாதத்தில் கணவனின் வீட்டில் நடத்தப்படுவது. கர்ப்பவதிகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு போன்றவை நிகழாமல் காப்பதற்காகச் செய்யப்படுவது.

ஆதிகாலத்து அறுவைச் சிகிச்சை நிபுணரும் புகழ் பெற்ற மருத்துவருமான சுஸ்ருதர் கர்ப்பவதியின் வலது மூக்கில் ஆலம் விழுதினை நசுக்கிப் பிழிய வேண்டும் என்று கூறுகின்றார்.

பித்தம் அதிகமாதல், வயிற்று நோவுகள் போன்றவற்றிற்கு ஆலம் விழுதின் சாறு அருமையான மூலிகையாகும்.

திருமணத்தில் அரசாணிக்கால் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. அரசாணிக்கால் என்றால் என்ன? அரசு, ஆல், முருக்கு இம் மூன்றும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைக் குறிக்கும்.

இவர்களின் ஆசியுடன் மணமக்கள் இல்லறத்தில் இணைவது சிறப்பானது. தற்பொழுது இம்மூன்று கிளைகளுக்குப் பதிலாக முள்முருக்கம் தடி ஒன்றை நட்டு அதனை புதிய வெண்மையான துணிகொண்டு மூடிக்கட்டி ஏழு பகுதிகளாகப் பிரிக்கின்றனர்.

திருமணம் நிறைவேறி மணமக்களை வாழ்த்தும் பொழுதும் முனைமுறியாத பச்சரிசியை (அட்சதை) மஞ்சல் கலந்து தம்பதிகளின் சிரசிலிட்டு 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாயாக' என வாழ்த்தும் மரபு ஆல், அறுகின் சிறப்பை நோக்கியதாகும்.

அறுகரிசி இடும் பொழுது சிரசு, தோள், பாதம் என கேசாதி பாதம் முறையில் இட்டு வாழ்த்துவதே சிறப்பானதாகும்.

அல், அரசஞ் சமித்துக்கள் 'ஹோமம் செய்யப் பயன்படுவன. அதனை வெட்டி விறகாக உபயோகிக்கக் கூடாது. அந்த மரங்கள் புனிதமானவை.

அலின் பழம், காய், தயிர், விழுது அனைத்துமே மருத்துவப் பயன்மிக்கன. ஆலமரம் புராணத்துடனும் தொடர்புபடுகின்றது.

பிண்டம் போடுபவர்கள், பல்குனி நதிக்கரையிலும் விஷ்ணுபாதத்திலும் அக்ஷய வடத்தின் அடியிலும் சிரார்த்த காரியங்களைச் செய்து ஆலமரத் தடியில் ஒரு காய், ஒரு கனி, ஒரு இலையைத் தியாகம் செய்து வாழ்நாள் முழுவதும் அதனை உண்ணுவதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும் .

என்றும் அழியாததான வயது கண்டறிய முடியாமல் மூத்துச் செழித்திருக்கும் இந்த ஆலமரத்தின் அடிப்பாகத்தை பிரயாகையிலும் நடுப்பகுதியைக் காசியிலும் நுனிப்பகுதியை கயாவிலும் காண அமைந்துள்ளதாக புரதான சாத்திரங்கள் கூறுகின்றன.