சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!

சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!
மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜிப்பதா…? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? அத்தகைய அதிசயமான மண் வழிபாடு நடைபெறுவது, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் தான்!
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்ட இத்தலம், மண் அரக்கனால் வழிபடப்பட்டது என்பதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது. அதன் காரணமாகவே மண் அரக்கநல்லூர் என்பது பின்நாளில் மருவி, மண்ணச்ச நல்லூர் ஆனது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூமிநாத சுவாமி சுயம்பு மூர்த்தி. உளிபடாத, சற்றுச் சாய்ந்த லிங்கத் திருமேனியை உடையவர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10, 11 தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிக்கீற்றுகளைக் கொண்டு இறைவனின் திருமேனியில் படரவிட்டு வழிபடுவது தனிச்சிறப்பான ஒன்றாகும். இவ்வாலயத்தில் வன்னி மற்றும் வில்வ மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.
கட்டடத்தொழில், ரியல்எஸ்டேட், விவசாயம் செழிக்க, போர்வெல் அமைக்க என்று பூமி சம்பந்தமான அனைத்து தொழில் செய்பவர்கள், தங்களுக்கென்று நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் என அனைவருமே இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த வழிபாடு வித்தியாசமானது; எங்கும் கேட்டறியாதது என்றே சொல்ல வேண்டும். அதாவது, நாம் வாங்கிய அல்லது விற்க நினைக்கும் நிலத்தின் மண்ணை சுப தினத்தில், புதன் ஹோரையில், வடகிழக்கு மூலையில் எடுக்க வேண்டும். கொஞ்சமாக மண்ணை எடுத்து, மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும்.
முதலில், கொடி மரத்து விநாயகருக்கு ஒரு விளக்கேற்றி வழிபட்ட பின்னர், அம்பாள் தர்மசம்வர்த்தினிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்ததாக, மூலவர் அருள்மிகு பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோயிலை இரண்டாவது முறை வலம் வரும்போது, வன்னி மரத்தடியில் இருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்து அதை மஞ்சள் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், வன்னி மரம் நீரோட்டமுள்ள ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது என்பதுடன், இங்கு வருடந்தோறும் மார்கழி மாதம், ஞாயிற்றுக் கிழமைகளில் ருத்ர அபிஷேகம், ருத்ர ஹோமம் செய்யப்பட்ட மணல் வன்னி மரத்தின் அடியில் போடப்பட்டு வருகிறது. அந்த மண்ணை பரிகார மண்ணாக பக்தர்கள் எடுத்துச் செல்வதால், அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. மூன்றாவது முறை கோயிலையும், நவகிரகங்களையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
அடுத்தநாள் காலையில், புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் நாம் எற்கெனவே மண் எடுத்த ஈசான்யத்தில் கோயிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைக் கொட்டி, கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். மண் எடுத்து வந்த மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை முடிந்து, வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். நமது பிரார்த்தனை நிறைவேறியதும், அருள்மிகு பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். நாம் எற்கெனவே முடிந்து வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தை பூமிநாத சுவாமிக்கு சமர்பிக்க வேண்டும்.
வீடு வாங்குதல், வாஸ்து தோஷம், சொத்து பாகப் பிரச்னைகள், தென்-வட மூலை உயரம், ஜென்ம சாபம், பாப தோஷம், பூமி குற்றம், பில்லி சூன்யம், ஏவல், எந்திரம், மந்திர தோஷங்கள் உட்பட 16 வகையான பூமி பிரச்னைகளுக்கு, இத்தலத்து இறைவனை வழிபடுவதால் நற்பயன் விளைகிறது. அருள்மிகு பூமிநாத சுவாமி கோயிலுக்கு வந்து வணங்கினாலே அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும் என்று அகத்தியர் நாடியில் கூறப்பட்டுள்ளது.