காதலிப்பவர்களை ஒன்று சேர்க்கும் வீரட்டேஸ்வரர் ஆலயம்

காதலிப்பவர்களை ஒன்று சேர்க்கும் வீரட்டேஸ்வரர் ஆலயம் !!!

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளன. இப்படி தனித்துவம் வாய்ந்த கோவில்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் இருக்கும் போது, காதலிப்பவர்களை ஒன்று சேர்ப்பதற்கென்று கோவில் ஏதும் உண்டா என்பது பலரது கேள்வி…..

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பாமல் இருப்பது, தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினத்தில் உள்ள கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்.

அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. இத்திருத்தல மூலவரான சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 26வது தேவாரத்தலம்.

எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். ஆனால் முருகனோ தன்னால் தன் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்றார். கடைசியில் தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் சென்று எப்படியாவது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

எதையும் யோசிக்காமல் ஈசனின் தவத்தை கலைக்க ஒப்புக்கொண்டார் மன்மதன். அதன்படி, சிவபெருமான் மீது அம்பெய்து அவரது தியானத்தை கலைத்தார். எம்பெருமான் மீது கணை தொடுக்க, கோபமடைந்த ஈசன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து விடுகிறார். பஸ்பமாகிய மன்மதனை கண்டு பதறிப்போனாள் ரதி தேவி. அதன்பின் ஈசனிடம் சென்று தன் கணவரை மீட்டுத்தர வேண்டினாள். சிவபெருமானின் அருட்கடாட்சத்தால் மன்மதன் உயிர் பெற்றான். ஈசன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆலயம் திறக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஆலய முகவரி: அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை – 609 203, நாகப்பட்டினம் மாவட்டம்.