பாரசிட்டமால்

பாரசிட்டமால்


குழந்தைக்கு லேசாக உடம்பு கதகதப்பானால் போதும்... இதுக்கெதுக்கு டாக்டர்?’ என தாமாகவே பாரசிட்டமால் மருந்து கொடுக்கும் பெற்றோர் பலர். ‘பாரசிட்டமால் மருந்து அதிகம் கொடுக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்படுவார்கள்’ என எச்சரிக்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் தலைமை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் அலாஸ்டர்சட்கிலாஃபி. இது பற்றிய நம் சந்தேகங்களைத் தீர்க்கிறார் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.

உடலில் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியாகவே காய்ச்சல் வருகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. அந்தந்த தொற்றுநோய்க்கான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கும்போதுதான் முழுமையாக நோய் குணமடையும். மாறாக, காய்ச்சலை குறைப்பதற்காக பாரசிட்டமால் கொடுக்கும்போது தொற்றுநோய்கள் வெளியே தெரியாமல் போய்விடுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். பாரசிட்டமால் மருந்துகளை சிரப்புகள் வடிவில் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவை இனிப்பாக இருப்பதால் அதிகம் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

அடிக்கடி பாரசிட்டமால் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நாளடைவில் கல்லீரல் நஞ்சு, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் பாரசிட்டமால் மருந்துக்கு குழந்தைகளின் உடல் பழக (Tolerance) ஆரம்பித்து, வேறு ஏதேனும் காய்ச்சலுக்காக கொடுக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளாது. காய்ச்சலும் குறையாது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தகுந்தவாறு மாத்திரையின் வலிமை, அளவு, கொடுக்கும் நேரங்கள் போன்றவற்றை குழந்தைகள் நல மருத்துவரால்தான் கணக்கிட்டு கூற முடியும். மருத்துவரின் பரிந்துரையின்றி, பெற்றோர் தாமாகவே பாரசிட்டமால் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.”