கடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு!!!

கடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு!!!

தமிழகம் என்றாலே கோயில்கள் மயம்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. புகழ்பெற்ற சிவன் கோயில்களில் நவகிரக சந்நிதிகளும் உள்ளன. ஆனால், தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், கடலில் அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியது.
தேவிப்பட்டினத்து நவபாஷான சந்நிதிக்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள்…
அலை பொங்கித் ததும்பும் கடலில் “இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!’ எனப் பெருமாளிடம் வேண்டினாராம் ராமபிரான். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைத்தாராம் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்தத் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இது ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில், ஆதி ஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ள சந்நிதி, கடலடைத்த பெருமாள் சந்நிதி என்ற பெயருடன் அழகாகத் திகழ்கிறது.
இங்கு ஏன் கடல் அலையை நிறுத்த வேண்டும்? ராமபிரான், உப்பூரில் வெயிலுகந்த விநாயகரை வேண்டிவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குக் கேட்கிறது. “சீதையை ராவணன் தூக்கிச் சென்றதற்கு நவக் கிரக தோஷம்தான் காரணம் என்றும், அது போவதற்கு, கடல் நடுவே மணலால் நவக் கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!’ என்றும் அந்த அசரீரி சொன்னதாம்.
அதனால், ராமபிரானும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம் அப்போது, ஸ்ரீமந் நாராயணனை வேண்டிக் கொள்ள, மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறின. ராமனின் வேண்டுகோளால் கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்துவிடுகின்றன. இதனாலேயே, தேவிப்பட்டினம் நவபாஷனம் என்றும், கடலுக்குள் நவக்கிரக சந்நிதி அமையப் பெற்றது என்பதும் சிறப்புக்குரியதாக ஆனது.
என்னதான் புனிதத்துவம் வாய்ந்த இடம் என்றாலும், கடற்கரை பகுதியில் இருந்தே துர்நாற்றமும், அசுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. நீண்ட பாலம் வழியாக நடந்து சென்று, கடல் நீருக்குள்ளான நவக்கிரக சந்நிதியை அடைய வேண்டும். அப்பகுதி முழுவதுமாக கன்னங்கரேலென அடர் கறுப்பு நிறத்தில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அதற்குள் இறங்கித்தான் பக்தர்கள் நவக்கிரக வழிபாடு மற்றும் தோஷங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தத் தலத்துக்கான புனிதத்துவம் சிறக்கும்.
திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக தோஷ நிவர்த்தி என தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நவக்கிரக சந்நிதி நோக்கி வந்து கொண்டேயுள்ளனர்.
நவகிரக தோஷம் மட்டுமல்லாது, ராமபிரான் சனியின் பாதிப்பில் இருந்தும் விடுபட்டார் என்று ஒரு புராணக் கதையும் இங்கே உண்டு. இங்கே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். சிவபெருமான் திலகேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி செளந்தரநாயகியாகவும் காட்சி தருகின்றனர்.
இந்த நவகிரக சந்நிதிக்கு, நவபாஷனக் கோவில் என்று ஒரு பெயரும் உள்ளது. பாஷனம் என்றால் கல். நவ தானியங்களைக் கொண்டு இந்தக் கற்களுக்கு பூஜைகள் செய்யப் படுகின்றன. அமாவாசை நாட்களில் ஏராளமானோர் இங்கே குவிகின்றனர். மூதாதையரை வழிபட்டு, சாப விமோசனம் அடைகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.